டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து கால்நடை ஏற்றுமதி மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசின் மசோதாவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், ஜெயின் மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜூன் 7, 2023 அன்று ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், மசோதாவின் வரைவை வெளியிட்டு அந்த வரைவு குறித்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கோரியது. முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் சிவில் சமூகத்தில் இருந்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்களை எதிர்கொண்டதால், ஒன்றிய அமைச்சகம் இன்று (21.06.2023) வரைவு மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அந்த அறிவிப்பின் படி, கால்நடை இறக்குமதிச் சட்டம், 1898, சுதந்திரத்திற்கு முந்தைய மத்தியச் சட்டம் என்பதால், சுகாதார மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான சமகாலத் தேவைகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளுடன் அதை இணைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அடிப்படையில், மசோதாவின் நோக்கம் முதன்மையாக கால்நடை சுகாதார வசதிகள், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் ஆதரவளிப்பதாகும், கால்நடை வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான விலங்குகள் நல அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், ஆலோசனையின் போது, முன்மொழியப்பட்ட வரைவை புரிந்து கொள்ளவும், மேலும் கருத்துகள்,பரிந்துரைகளை வழங்கவும் போதுமான அவகாசம் தேவை என்று பார்க்கப்பட்டது. விலங்கு நலன் மற்றும் தொடர்புடைய அம்சங்களுடன், உணர்ச்சிகளை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட வரைவின் மீதான கவலைகளை வெளிப்படுத்தும் பிரதிநிதித்துவங்கள் செய்யப்பட்டுள்ளன, எனவே, விரிவான ஆலோசனை தேவைப்படும்,” என்று கூறப்பட்டது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இணைச் செயலாளர் ஜி.என்.சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேற்கூறிய கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, தகுதியான அதிகாரியின் ஒப்புதலுடன், முன்மொழியப்பட்ட வரைவு மசோதா திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
The post கடும் எதிர்ப்புகளை சந்தித்த புதிய கால்நடை ஏற்றுமதி மசோதாவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.